கட்டாய மருத்துவத்திலிருந்து விலக்கு கோரி. .
கட்டாய மருத்துவத்திலிருந்து விலக்கு கோரி. .
Why this petition matters
மதிப்பிற்குரிய ஐயா/ அம்மா,
வணக்கம்.
பொருள்: பள்ளிகளில் அனைவருக்கும் தடுப்பு மருந்து/ தடுப்பூசி மற்றும் மாத்திரைகள் என கட்டாயப்படுத்தாமல் விருப்பமுள்ளோருக்கு மட்டும் அதைத் தொடர்ந்திடவும் , விருப்பமில்லாதோருக்கு விதிவிலக்கு அளித்திடவும் கோருதல்
தமிழகத்தின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்நாடு மாணவர் சுகாதார அட்டை என்றொரு அட்டை கொடுக்கப்பட்டு, வருடந்தோறும் மாணவர்களுக்கு உடல் நலப் பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சைகளுக்கான பரிந்துரை அளிக்கப்பட்டு வரும் திட்டத்தின் கீழ் அனைத்துக் குழந்தைகளையும் கட்டாயப்படுத்திடாமல் விருப்பமுள்ளோர்க்கு மட்டும் அதைத் தொடருமாறு வேண்டியும், விருப்பமில்லாதோருக்கு விதிவிலக்கு அளிக்கக்கோரியும்,
அதே போல், அனைத்துப் பள்ளிகளிலும் அவ்வப்போது நடைபெறும் பொதுத் தடுப்புமருந்து / தடுப்பூசி அளிக்கும் திட்டத்தையும் அனைவருக்கும் கட்டாயப்படுத்தாமல் விருப்பமுள்ளோருக்கு மட்டும் தொடர வேண்டியும், விருப்பமில்லாதோருக்கு விதிவிலக்கு அளித்திடக் கோரியும் இம்மனுவை அளிக்கிறோம்.
தேசிய கிராமப்புற சுகாதாரத் திட்டத்தின் (National Rural Health Mission) வழிகாட்டுதலின்படி, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை (EAP II-1)யின் 09.06.2014 தேதியிட்ட சுற்றறிக்கை எண் 123ன்படி, பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத்துறை மூலம், தமிழ்நாடு மாநில சுகாதார அமைப்பால், செயல்படுத்தப்படும் ராஷ்டிரிய பால் ஸ்வஸ்திக் கர்யாகிராம் எனும் இத்திட்டம் 18 வயது வரையான மாணவர் மற்றும் குழந்தைகளுக்கான பலவித நோய்களைக் கண்டறிந்து அதற்கான மருந்து / ஊசி அளிப்பதோடு, தொடர் சிகிச்சைகளையும் பரிந்துரை செய்கிறது. ஆனால், சிகிச்சையென்பதை எந்த மருத்துவ முறையின்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை சுயமாகத் தீர்மானிக்க அனுமதிக்காமல், அனைத்து நோய்களுக்கும், குறைபாடுகளுக்கும் அலோபதி எனும் ஒரு குறிப்பிட்ட மருத்துவமுறையின்படி மட்டும்தான் மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் தரப்படுகின்றன.
மேலும், அனைத்துக் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்தையும் கட்டாயப் பரிந்துரை செய்வதால், அனைத்து வகையிலும் ஒவ்வொரு மாணவரையும் அலோபதி எனும் குறிப்பிட்ட மருத்துவ முறையின் கீழ் மட்டும் சிகிச்சையெடுக்கும் நிர்ப்பந்தத்தையும் உருவாக்குகிறது என்பதைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறோம்.
குறிப்பாக, இத்திட்டம் மத்திய அரசின் திட்டமாக பல ஆண்டுகளாக அமலில் இருந்தாலும், தமிழ்நாடு மாணவர் சுகாதார அட்டை அச்சடித்து அதன்மூலம் கட்டாயத் தடுப்பு மருந்து / தடுப்பூசி மற்றும் மாத்திரைகள் என்பது 2019 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாநில அரசின் முன்முயற்சியின் கீழ் செயலுக்கு வந்துள்ளதாக அறிகிறோம்.
ஒவ்வொரு மாணவரும் மாற்றுச் சான்றிதழ் பெறும் சமயம் பள்ளியால் இந்த உடல்நலக் குறிப்பேடும் வழங்கப்பட வேண்டுமென்று அந்த அட்டையில் அச்சிடப்பட்டுள்ளது. அத்தோடு ஒவ்வொரு சிகிச்சையின் போதும் ஆசிரியரின் கையெழுத்தும் அவசியமென்பதால், கடந்த காலத்தில் இல்லாத வகையில் இவ்வாண்டு முதல் இத்திட்டம் ஒவ்வொரு மாணவர் மீதும் நிர்ப்பந்தம் செய்யப்படுவதாகவே நடைமுறையில் அமைந்துவிடுகிறது. இது அம்மாணவரின் பெற்றோரின் சம்மதத்தோடு நடைபெறுவதாக இல்லை.
மாணவரின் பெற்றோர் ஏதேனுமோர் பாரம்பரிய மருத்துவ முறையை பின்பற்றுவோராக இருப்பின் இத்திட்டம் அவரின் அடிப்படை மருத்துவ உரிமை மற்றும் வாழ்வுரிமையைப் பறிப்பதாகும் என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
எனவே, அனைவருக்கும் அவசியம் எனக் கட்டாயப்படுத்தாமல் விரும்புவோருக்கு மட்டும் இந்த சுகாதார அட்டையை வழங்கி இத்திட்டத்தைத் தொடர வேண்டுகிறோம். பாரம்பரிய மருத்துவத்தில் சிகிச்சை எடுக்க விரும்புவோரை அவர்களின் விருப்பத்திற்கேற்ப தொடர அனுமதிக்க வேண்டுகிறோம்.
எனவே, பெற்றோர் விருப்பமில்லாமல் உடல்நலக் குறிப்பேடு எனும் இந்த அட்டையின் அடிப்படையிலான சிகிச்சையை கட்டாயப்படுத்திட வேண்டாம் எனத் தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த நோய்த் தடுப்புத் திட்டமானது முழுக்க முழுக்க அலோபதி மருத்துவ முறையின் அடிப்படையிலானதாகும். இதுவே பெரும் முரண்பாட்டுக்குரியதாகும். ஒரு நாட்டின் சுகாதாரத்துறை என்பது அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மருத்துவ முறைகளையும் சமமாகப் பாவிக்க வேண்டுமேயொழிய, அதற்கிடையே பாரபட்சம் காட்டக்கூடாது. மருத்துவம் குறித்த அரசின் எந்தவொரு திட்டமானாலும் மக்களின் அடிப்படை மருத்துவ உரிமையை அங்கீகரிக்கும் வகையில் அது அமையப்பெறுவது மிக அவசியமென தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.
மேலும், ஒரு குறிப்பிட்ட மருத்துவ முறையை மட்டுமே சுகாதாரத்துறை உயர்த்திப் பிடிக்குமெனில் அது இந்தியா போன்ற பாரம்பரிய மருத்துவம் செழித்தோங்கிய நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக இருக்க முடியாது. ஆங்கிலேய மருத்துவம் நம் மக்களின் மனதை மாற்ற கையாண்ட உத்திகளையும், திட்டங்களையும் வரலாறு நன்கறியும்.
பொதுச் சுகாதாரத் துறை 1923ம் ஆண்டில்தான் தமிழகத்தில் தொடங்கப்பட்டது. 1939ல்தான் பொதுச் சுகாதாரச் சட்டம் 1939 இயற்றப்பட்டது. ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட சுகாதாரத்துறை சட்டரீதியாக பாரம்பரிய மருத்துவங்களை ஒடுக்கி, அவற்றை அறிவியலுக்கு விரோதமென்று கூறி, ஆங்கிலேய மருத்துவத்தை மட்டுமே முன்னெடுக்கச் செய்த செயல்களெல்லாம் அடிமை இந்தியாவின் இருண்ட பக்கங்களில் உள்ள வரலாற்று உண்மைகளாகும்.
இப்போது இந்நாடு சுதந்திர இந்தியா என்பது மட்டுமல்ல. . . பாரம்பரிய மருத்துவங்களுக்கு கல்லூரிகள் முதல் சட்டங்கள் வரை உருவாகியுள்ள காலமும் ஆகும். இந்தியப் பாரம்பரிய மருத்துவ முறைகள் உலக சுகாதார நிறுவனத்தாலும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறைகளாகும். ஆக, உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளை சுகாதாரத்துறை தனது திட்டங்களில் புறக்கணிக்குமெனில் அது சுதந்திர இந்தியாவில் பொருத்தமற்றது என்பதைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.
இந்திய அரசு மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு மருத்துவ முறையானாலும் பிறப்பு முதல் இறப்பு வரையான அத்தனை உடல்நலம் மற்றும் மனக்குறைபாடுகளுக்கும் சிகிச்சையளிக்க வல்லதாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒரு அரசானது ஒரு குறிப்பிட்ட மருத்துவ முறையை மட்டும் நாட்டின் அத்தனை மக்களுக்கும் நிர்ப்பந்தப்படுத்துவது அடிப்படை உரிமைக்கே மாறானதாகும். அப்படியான நிலை தொடர்வது நீண்டகால நோக்கில் அணுகப்படுமாயின், நிச்சயம் மனிதகுலத்திற்கே பேராபத்தாகும்.
ஆரோக்கியம் மற்றும் நோய்த்தடுப்பு ஆற்றல் என்பது செயற்கை இரசாயனங்களால் தயாரிக்கப்படும் ஊசி மற்றும் மருந்துகளால் மட்டுமே மனிதகுலத்திற்கு கிடைக்குமென்பது நிச்சயம் மரபுவழி மருத்துவங்களின் கோட்பாட்டிற்கு முற்றிலும் மாறானதாகும். உணவுமுறை, தூக்கம், ஓய்வு, சிந்தனை போன்ற ஒரு மனிதனின் வாழ்முறையே அவரது ஆரோக்கியம் மற்றும் நோய்த்தடுப்பாற்றலைத் தீர்மானிக்கும் என்பதே காலம் காலமாக நம்மிடம் இருந்த உண்மையும், நம்பிக்கையும் ஆகும். அதனால்தான், வாழும்முறையை மேம்படுத்தும் கோட்பாடுகள் கல்வியின் ஒரு பகுதியாகவும் கொண்டுவரப்பட்டன.
ஆனால், சுமார் 30 வகையான உடல் குறைபாடுகளைப் பட்டியலிடும் தமிழ்நாடு மாணவர் சுகாதார அட்டையானது அனைத்திற்கும் பரிந்துரைப்பது அலோபதி எனும் ஒற்றை மருத்துவமுறை தரும் ஊசி மற்றும் மருந்துகளை மட்டுமே ஆகும். அலோபதி மருத்துவத்தை நம்பும் ஒருவரின் அடிப்படை உரிமை இது என்ற அடிப்படையில் இதை அங்கீகரிக்கலாமேயொழிய, பாரம்பரிய மருத்துவத்தை நம்பும் ஒருவரின் மருத்துவ நம்பிக்கைகள் மற்றும் வாழும்முறைக்கு இவை யாவும் முற்றிலும் விரோதமானதாகும்,
அதுமட்டுமில்லாமல், மாஸ் வேக்சினேசன் கேம்பைன் எனும் பெயரில் பொது முகாம்கள் நடத்தி, தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகளை அனைவருக்கும் கட்டாயமென அரசு கட்டாயப்படுத்துவதன் மூலம் ஒவ்வொருவரின் தனி உரிமையிலும் தலையிட்டு அத்துமீறுவதாகவே அமைகிறது. எப்போதெல்லாம் பொதுத் தடுப்பூசி/ தடுப்பு மருந்து அளிக்கப்படுகிறதோ, அச்சமயம் பெரும்பாலான நேரங்களில் அதிக அளவிலான உயிரிழப்புகளும், உடல் நல பாதிப்புகளும் இந்தியாவில் ஏற்படுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் இது குறித்து விசாரிப்பதற்கான தடுப்பு மருந்து விசாரணை நீதிமன்றம் எனத் தனிநீதிமன்றங்களும், சட்டங்களும் இருக்கும் சூழலில் இந்தியாவில் அப்படியான எந்தவொரு ஏற்பாடுகளும் இல்லை.
உயிரிழப்பு மற்றும் இதர பாதிப்புகள் ஏற்படும் காலங்களில் முறையான விசாரணைக்கான சூழல்கூட இந்தியாவில் இதுகாறும் உருவாக்கப்படவில்லையென்பதே உண்மையாகும். இச்சூழலில், அனைவருக்கும் தடுப்பூசி/ தடுப்பு மருந்து எனக் கட்டாயப்படுத்துவது முறையானதாக இருக்காது எனப் பணிவுடன் கூறிக்கொள்கிறோம்.
குறிப்பாக தடுப்பூசி/ தடுப்பு மருந்துகள் குறித்த பல கேள்விகள், சந்தேகங்கள் அலோபதி மருத்துவர்களாலேயே உலகமெங்கும் எழுப்பப்பட்டு வருகின்றன. கீழேயுள்ள சில கருத்துகள் போன்று உலகெங்கும் பல்லாயிரம் கருத்துகள தடுப்பூசிகளுக்கு எதிராக சமீப காலங்களில் உருவாகி வருவதையும், அவை அனைத்தும் அலோபதி மருத்துவர்களால் மட்டும்தான் ஆதாரங்களோடு வெளியிடப்படுகிறது என்பதையும் உலகறியும்.
1. இந்திய மருத்துவக் கழகத்தின் தடுப்பு மருந்துப் பிரிவின் முன்னாள் தலைவர் டாக்டர்.ஜேக்கப் புலியேல் The Hindu நாளிதழில் எழுதிய கட்டுரையில் நவம்பர், 16, 2006-ல் மட்டும் போலியோ சொட்டு மருந்து கொடுத்ததனால் இந்தியாவில் 1600 பேருக்கு போலியோ பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், 27000 பேர் பாதிக்கப்பட சாத்தியம் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
2. “1961க்குப்பின் அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவிற்கும் காரணம் - போலியோ சொட்டுமருந்துதான்” என்று அமெரிக்க செனட் கமிட்டியில் ஒப்புக்கொண்டார் போலியோ சொட்டு மருந்தைக் கண்டுபிடித்த ஜோனஸ் சால்க்!
3. ஊட்டச்சத்து குறைவினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பு ஊசிகளைக் கொடுத்த பிறகு, எதிர்பார்த்த நோய் எதிர்ப்புத்திறன் கிடைக்கவில்லை என்று 1979 ஆம் ஆண்டில் டாக்டர். ஆர். கே. சந்திரான் என்பவர் பதிவு செய்துள்ளார். R.K.Chandra, “Nutritional Deficiency and susceptibility to Infection”, Bulletin of WHO, No.57(2): 167-177 (1979))
4. Vidya Krishnan “Is India actually free of polio?”, The Hindu 4 December 2015. இந்தியாவில் போலியோ ஒழிந்துவிடவில்லை என்பதை ஆதாரங்களுடன் வலுவாகக் கூறுகிறது.
5. மேலும், டில்லி உயர்நீதிமன்றமும், கேரளா உயர்நீதிமன்றமும் தடுப்பூசிகளை பெற்றோர்களின் சம்மதமில்லாமல் குழந்தைகளுக்கு செலுத்த வேண்டாமென தீர்ப்பு வழங்கியதையும் நாடறியும்.
எனவே, இந்தச் சூழல்களை கணக்கில் கொண்டு, தமிழ்நாடு மாணவர் சுகாதார அட்டையை அனைவருக்கும் கட்டாயப்படுத்தவேண்டாமென்றும், பொது முகாம் மூலம் கட்டாயத் தடுப்பூசி/ தடுப்பு மருந்துகளை அனைவருக்கும் கட்டாயப்படுத்திட வேண்டாமென்றும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
விருப்பமுள்ள பெற்றோர்களின் குழந்தைகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் வகையில் இத்திட்டங்கள் தொடர்கையில் குடிமகன்களின் அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படாதெனவும் தெரிப்பதோடு, அதற்குப் பொருத்தமான நடவடிக்கைகள் எடுத்திடவும் வேண்டுகிறோம்.
Decision Makers
- The Director
- உயர்திரு. இயக்குநர் அவர்கள், பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத்துறை இயக்குநகரம்
- The director, Directorate of School Education
- The mission director, State health society, National Health Mission – Tamil Nadu
- Hon’ble Minister